ஊழியர் சேமலாப நிதியம்
இலங்கையின் நிதியியல் துறை சொத்துக்களில் 12 சதவீதத்திற்கும் மேலான பங்கைக் கொண்டுள்ள ஊழியர் சேமலாப நிதியமானது வரலாற்றிலேயே மிக உயர்ந்தளவான உறுப்பினர் பங்களிப்புக்கள் மற்றும் முதலீட்டு வருமானத்தைக் கொண்டுள்ளதன் காரணமாக 2025ஆம் ஆண்டில் மேலும் தொடர்ந்து விரிவடைந்தது. இதற்கமைவாக, நிதியத்தின் தேறிய பெறுமதியானது ஆண்டிற்கு ஆண்டு 13.0 சதவீதத்தினால் 2025 இறுதியில் ரூ.4,942.9 பில்லியனிற்கு அதிகரித்தது. ஊழியர் சேமலாப நிதியத்தின் உறுப்பினர்கள், தனியார் துறையின் ஊழியர்கள் மற்றும் அரசுசார்ந்த துறையின் தொழில்தருநர்கள் போன்றோரின் ஓய்வூதியக் காலப்பகுதியில் அவர்களின் நிதியியல் நலனோன்புகைகக்கு உதவுவதே ஊழியர் சேமலாப நிதியத்தின் முக்கிய குறிக்கோளாகும்.
ஊழியர் சேமலாப நிதியத்தின் நிர்வாகப் பணிகளை தொழில் ஆணையாளர் மேற்பார்வை செய்கின்றார். மாறாக, நிதியச் சொத்து முகாமைத்துவமானது இலங்கை மத்திய வங்கியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 1958ஆம் ஆண்டின் 15ஆம் இலக்க ஊழியர் சேமலாப நிதியச் சட்டத்தினால் இலங்கை மத்திய வங்கிக்கு ஒப்;படைக்கப்பட்ட கடமைகள் மற்றும் பொறுப்புக்களை வசதிப்படுத்தும் பொருட்டு, இலங்கை மத்திய வங்கியினுள் ஊழியர் சேமலாப நிதியத் திணைக்களம் தாபிக்கப்பட்டுள்ளது. ஊழியர் சேமலாப நிதியச் சட்டத்தின் கீழ் பங்களிப்புக்கள், மிகைக் கட்டணங்கள், மற்றும் கட்டணங்களாகச் செலுத்தப்படும் அனைத்து தொகைகளையும் அத்துடன் பண முதலீட்டிலிருந்து கிடைக்கப்பெறும் வருமானத்தையும் பெற்றுக்கொள்ளுதல், நிதியத்தின் பணத்தை கட்டுக்காவலில் வைத்திருத்தல், நிதியத்தின் ஒவ்வொரு உறுப்பினருக்கும் தனித்தனியாகக் கணக்குகளைப் பேணுதல், தொழில் ஆணையாளரினால் சான்றளிக்கப்பட்ட நபர்களுக்குச் சட்டத்தின் கீழ் அவர்கள் பெறுவதற்கு உரித்துடைய நன்மைகளை வழங்குதல், சட்டத்தில் குறித்துரைக்கப்பட்ட நோக்கங்களுக்காக உடனடியாக வேண்டப்படாத நிதியத்தின் பணத்தை முதலீடுசெய்தல், நிதியத்துடன் தொடர்புடைய கணக்குப் புத்தகங்களைப் பேணுதல், நிதியத்தின் நிதியியல் கூற்றுக்களைத் தயாரித்து, அதன் பிரதியொன்றை தொழில் விடயத்திற்கு பொறுப்பாகவுள்ள அமைச்சருக்கு அனுப்புதல் மற்றும் அதனைக் கணக்காய்வாளர் தலைமையதிபதியிடம் சமர்ப்பித்தல் போன்றவற்றை அத்தகைய கடமைகளும் பொறுப்புக்களும் உள்ளடக்குகின்றன.
ஊழியர் சேமலாப நிதியச் சட்டத்தின் பிரகாரம், ஊழியர்கள் தமது மொத்த வருமானத்தில் குறைந்தபட்சம் 8 சதவீதத்தினை நிதியத்திற்கு பங்களிக்க வேண்டிய அதேவேளை தொழில்தருநர்கள் குறைந்தபட்சம் 12 சதவீதத்தினைப் பங்களித்தல் வேண்டும். இந்த 20 சதவீத கூட்டிணைந்த பங்களிப்பானது ஊழியர்களுக்கான ஓய்வூதிய நிதியத்தை உருவாக்குவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஊழியர் சேமலாப நிதியமானது ஓய்வூதிய காலப்பகுதியில் அத்தியாவசியமான ஆதரவுமிக்க முறைமையொன்றாக மாத்திரமன்றி ஊழியரொருவரின் முழு பணிக்காலத்திலும் பெறுமதிமிக்க வளமாகவும் சேவையாற்றுகின்றது. வீடமைப்பு கடன்களைப் பெற்றுக்கொள்வதற்கான உத்தரவாத வசதி மற்றும் ஓய்வூதியத்திற்கு முன்னர் வீடமைப்பு மற்றும் மருத்துவச் செலவுகளுக்காக உறுப்பினர் கணக்கு நிலுவையில் 30 சதவீதம் வரை பகுதியளவில் எடுப்பனவு செய்வதற்கு வசதியளித்தல் போன்ற நன்மைகளை இது வழங்குகின்றது. இதன்விளைவாக, ஓய்வூதியத்தைப் பெறுவதற்கு முன்னர் சொந்த வீடு வாங்கும் தமது கனவை நனவாக்குவதற்கும், உடல்நலக் கரிசனைகளுடன் தொடர்புடைய செலவுகளை மீளப்பெற்றுக்கொள்வதற்கும் ஊழியர் சேமலாப நிதியம் ஊழியர்களுக்கு உதவுகின்றது.
2025 திசெம்பர் 31 இல் உள்ளவாறு நிதியத்தின் பொதுத் தகவல்கள்
| விடயம் | 2025 | 2024 | மாற்றம் (%) |
|---|---|---|---|
| நிதியத்தின் மொத்தச் சொத்து (ரூ.பில்.) | 4,942.9 | 4,375.7 | 13.0 |
| உறுப்பினர்களுக்கான பொறுப்பு (ரூ.பில்.) | 4,852.6 | 4,289.5 | 13.1 |
| கிடைக்கப்பெற்ற பங்களிப்புக்கள் (ரூ.பில்.) | 270.8 | 234.4 | 15.5 |
| மேற்கொள்ளப்பட்ட மீளளிப்புக்கள் (ரூ.பில்.) | 176.0 | 188.1 | (6.4) |
| தேறி பங்களிப்பு (ரூ.பில்.) | 94.8 | 46.3 | 104.8 |
| உறுப்பினர் கணக்குகளின் எண்ணிக்கை (மில்.) | 22.9 | 22.2 | 3.2 |
| ஆண்டுகாலப்பகுதியில் பங்களிக்கும் உறுப்பினர் கணக்குகளின் எண்ணிக்கை | 3,139,880 | 2,920,618 | 7.5 |
| மீளளிப்புக்களின் எண்ணிக்கை | 214,290 | 208,047 | 3.0 |
