ஊழியர் சேமலாப நிதியம்
1958ஆம் ஆண்டின் 15ஆம் இலக்க ஊழியர் சேமலாப நிதியச் சட்டத்தின் கீழ் தாபிக்;கப்பட்ட ஊழியர் சேமலாப நிதியம் 2024 இறுதியிலுள்ளவாறு ரூ.4.4 றில்லியன் கொண்ட சொத்துப் பெறுமதியுடன் தற்போது இலங்கையில் பாரிய சமூகப் பாதுகாப்புத் திட்டமாக விளங்குகின்றது. ஊழியர் சேமலாப நிதியத்தின் முதன்மைக் குறிக்கோள் தனியார் மற்றும் அரசாங்க-தனியார் பண்புகளைக் கொண்ட நிறுவனங்களில் தொழில்பெற்றுள்ள அதன் உறுப்பினர்களின் ஓய்வு காலப்பகுதியில் நிதியியல் நல்வாழ்வுக்கு ஆதரவளிப்பதாகும்.
ஊழியர் சேமலாப நிதியத்தின் நிர்வாகத் தொழிற்பாடுகளை தொழில் ஆணையாளர் மேற்பார்வை செய்கின்றார். மாறாக, நிதியத்தின் சொத்துக்களின் முகாமைத்துவம் இலங்கை மத்திய வங்கியிடம் பொறுப்பளிக்கப்பட்டுள்ளது. ஊழியர் சேமலாப நிதியச் சட்டத்தினால் இலங்கை மத்திய வங்கியிடம் பொறுப்பளிக்கபட்ட கடமைகளையும் பொறுப்புக்களையும் நிறைவேற்றுவதை வசதிப்படுத்துவதற்கு இலங்கை மத்திய வங்கியினுள் ஊழியர் சேமலாப நிதியத் திணைக்களம் தாபிக்கப்பட்டுள்ளது. பங்களிப்புகளாக ஊழியர் சேமலாப நிதியச் சட்டத்தின் கீழ் கொடுப்பனவு செய்யப்படும் அனைத்துத் தொகைகளையும், மிகைக் கட்டணங்களையும் விதிப்பனவுகளையும் அத்துடன் பணத் தொகைகளின் முதலீட்டிலிருந்து வருமானத்தையும் பெற்றுக்கொள்ளுதல், நிதியத்தின் பணத் தொகைகளின் கட்டுக்காப்பினை வைத்திருத்தல், நிதியத்தின் ஒவ்வொரு உறுப்பினர் தொடர்பிலும் வேறான கணக்குகளைப் பேணுதல், தொழில் ஆணையாளரினால் சான்றுபடுத்தப்பட்ட ஆட்களுக்கான நன்மைகளை சட்டத்தின் கீழ் உரித்துடைய ஆட்களுக்கு வழங்குதல், சட்டத்தில் குறித்துரைக்கப்பட்ட நோக்கங்களுக்காக உடனடியாக வேண்டப்படாத நிதியத்தின் பணத்தொகைகளை முதலிடுதல், நிதியத்துடன் தொடர்புடைய கணக்குகளின் ஏடுகளைப் பேணுதல், நிதியத்தின் நிதியியல் கூற்றுக்களைத் தயாரித்தல் அத்துடன் அதன் பிரதியை தொழில் விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சருக்கு அனுப்புதல் மற்றும் அதனை கணக்காய்வாளர் தலைமை அதிபதிக்குச் சமர்ப்பித்தல் என்பவற்றை அத்தகைய கடமைகளும் பொறுப்புக்களும் உள்ளடக்குகின்றன.
ஊழியர் சேமலாப நிதியச் சட்டத்தின் பிரகாரம் ஊழியர்கள் தமது மொத்த மாதாந்த உழைப்புக்களின் குறைந்தபட்சம் 8 சதவீதத்தினை நிதியத்திற்குப் பங்களிப்புச் செய்வதற்கு வேண்டப்பட்டுள்ள அதேவேளை, தொழில்தருநர்கள் ஊழியர்கள் ஓய்வுபெறும் வரை அவர்களின் உழைப்புக்களில் குறைந்தது 12 சதவீதம் பங்களிப்புச்செய்ய வேண்டும். 20 சதவீதம் கொண்ட ஒன்றிணைந்த குறைந்தபட்ச இப்பங்களிப்பு ஊழியருக்கான ஓய்வுகால நிதியத்தைத் தாபிப்பதை நோக்காகக் கொள்கின்றது.
ஊழியர் சேமலாப நிதியமானது ஓய்வுகாலத்தில் வருமானப் பாதுகாப்பை மாத்திரமன்றி ஊழியர்களின் பணி வாழ்நாள் முழுவதும் பெறுமதிமிக்க நிதியியல் மூலமொன்றாகவும் பணியாற்றுகின்றது. வீடமைப்புக் கடனைப் பெற்றுக்கொள்வதற்கான உத்தரவாத வசதி, வீடமைப்பினை மேற்கொள்வதற்கு உதவுவதற்காக 30 சதவீதம் வரை பகுதியளவான மீளெடுப்பிற்கு அனுமதித்தல் மற்றும் ஓய்வுக்கு முந்திய மருத்துவச் செலவுகள் போன்ற நலன்களையும் அது வழங்குகின்றது. இதன்விளைவாக, ஓய்வுபெறுவதற்கு முன்னரும் கூட, வீட்டு உரிமையைப் பெறுவதற்கான ஊழியர்களின் அபிலாக்ஷைகளை நிறைவேற்றுவதிலும் மருத்துவத்துடன் கரிசனைகள் தொடர்பான செலவுகளைப் பகிர்ந்தளிப்பதிலும் ஊ.சே.நிதியம் ஊழியர்களுக்கு உதவுகின்றது.
2024/12/31 உள்ளவாறு நிதியம் பற்றி பொதுவான தகவல்கள்
விடயம் | 2024 | 2023 | மாற்றம் (%) |
---|---|---|---|
நிதியத்தின் மொத்தச் சொத்து (ரூ.பில்.) | 4,375.7 | 3,886.7 | 12.58 |
உறுப்பினர்களுக்கான பொறுப்பு (ரூ.பில்.) | 4,289.5 | 3,817.9 | 12.4 |
கிடைக்கப்பெற்ற பங்களிப்புக்கள் (ரூ.பில்.) | 234.4 | 210.6 | 11.3 |
மேற்கொள்ளப்பட்ட மீளளிப்புக்கள் (ரூ.பில்.) | 188.1 | 215.9 | (12.9) |
தேறி பங்களிப்பு (ரூ.பில்.) | 46.3 | (5.3) | 973.6 |
உறுப்பினர் கணக்குகளின் எண்ணிக்கை (மில்.) | 22.2 | 21.5 | 3.3 |
பங்களிக்கின்ற உறுப்பினர் கணக்குகளின் எண்ணிக்கை – ஆண்டின் போது (மில்.) | 2,920,618 | 2,635,392 | 10.8 |
மீளளிப்புக்களின் எண்ணிக்கை | 208,047 | 221,822 | (6.2) |